ஒரு மருந்தின் பக்க விளைவுகள், அதன் அளவுக்கு மீறியப் பயன்பாட்டின் விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் சுயமாக மருந்து உட்கொள்ளல் மிகவும் ஆபத்தானது.
பெரும்பாலான நாடுகளில், ஒரு மருத்துவரின் கவனிப்பு இல்லாமல் பயன்படுத்தும் மருந்துகள், பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்தி மக்களுக்குத் தொண்டு புரியும் ஒழுங்குமுறை முகமையகம் தேர்ந்தெடுக்கிறது. எடுத்துக்காட்டாக, பராசிட்டமால் (அசெட்டமினோபன் அல்லது தைலெனோல்) உலகெங்கிலும் வாங்கலாம். இருப்பினும் பராசிட்டமாலை அதிக அளவு உட்கொள்வது ஆபத்தானது. ஆகையால், சில நாடுகள் விற்கும் மாத்திரைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன.
உலகின் பல பகுதிகளில் அளவு, கட்டுப்பாடுகள் இல்லாமல் கொல்லிகள் விற்கப்படுகின்றன. பெரும்பாலும், கொல்லிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை நுண்ணுயிர்ப்பிணி இல்லாத நோய்க்கு உட்கொள்ளப்படுகின்றன.[1] நோயாளியின் ஒவ்வாமை (உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு) பற்றித் தெரியாமல் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கப்பட்டதை விட குறுகிய கால பயன்பாட்டுக்கு அல்லது குறைந்த அளவு கொல்லிகளை மருந்து வழங்குநர்கள் விற்கலாம். இந்தப் பழக்கங்கள் பயனற்றவை. இதனால், நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் சிக்கலை மென்மேலும் மோசமாக்குகின்றன.
எழுதிக்கொடா கொல்லிகள் எளிதாக கிடைப்பதாலும், அவற்றைப் முறைப்படி பயன்படுத்துவது எப்போது என்று அறியாமல் அளவு மீறி உண்பதனாலும் நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் ஒரு தீய சுழற்சியை உருவாக்கியுள்ளது. அதிக எதிர்ப்பாற்றல் கொண்ட நுண்கிருமிகள் அடிக்கடி கொல்லிகளைப் பயன்படுத்துகின்ற குமுகாயங்களில் சர்வ சாதரணமாகக் காணப்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1]
பெரும்பாலான வளரும் நாடுகளிலும் எழுதிக்கொடா கொல்லிகள் பரவலாகக் கிடைக்கின்றன. ஏனென்றால், அதிக பயன்பாட்டால் வரும் விளைவுகளை விட அவற்றை நோயுற்றவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதே முக்கியம் என்று உணரப்படுகிறது.
கொல்லிகளையும் பிற மருந்துகளையும் பயன்படுத்தும் முறைகளை விதியமைப்பதா? கொல்லிகளின் எதிர்ப்பாற்றல் வளர்ச்சியைத் தடுப்பதா? எதற்கு செலவுகள் குறைவு? என்பது தெரியாததால் கொள்கை வகுப்பாளர்களுக்குள் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அணுகுமுறைகளும் கொல்லிகள் பற்றிய தவறான பொதுக் கருத்துகளும் எழுதிக்கொடா கொல்லிகளால் ஏற்படும் சிக்கல்களைத் தீவிரமாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக, வளர்ந்து வரும் நாடான மலேசியா எழுதிக்கொடா கொல்லிகளின் விற்பனையைத் தடை செய்கிறது.[2] மலேசிய நஞ்சு சட்டத்தின் கீழ், கொல்லிகளை வாங்குவதற்கு மருத்துவர்களிடமிருந்து ஒரு மருந்து சீட்டு தேவைப்படுகிறது. கொல்லிகளின் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டாலும், கொல்லிகளைப் பரிந்துரைக்கும் விகிதங்கள் பொது மற்றும் தனியார் முதன்மைப் பராமரிப்பு அமைப்புகளில் இன்னும் அதிகமாக உள்ளன.[2] கொல்லிகளின் தவறான பயன்பாட்டிற்கு மருத்துவர்களும் பங்களிக்கின்றனர். ஆகையால், அடுத்த கட்டத்தில் பரிந்துரைக்கும் விகிதங்கள் கொல்லிகள் விற்பனையை ஒழுங்குபடுத்த வலியுறுத்தல் வேண்டும்.
ஆதார நூற்பட்டியல்
[1] மோர்கன், டி. ஜே. ஒகேகி, ஐ. என். லக்ஷ்மிநாராயண், ஆர். பெரன்ஸ்விச், ஈ. என். & வைசன்பெர்க், எஸ். (2011). உலகளவில் பரிந்துரைக்கப்படாத கொல்லிகள் பயன்பாடு: ஒரு முறையான ஆய்வு.
Morgan, D. J., Okeke, I. N., Laxminarayan, R., Perencevich, E. N., & Weisenberg, S. (2011). Non-prescription antimicrobial use worldwide: A systematic review. The Lancet Infectious Diseases,11(9), 692-701. doi:10.1016/s1473-3099(11)70054-8
[2] ரஹ்மான், என். ஏ. டெங், சி.எல். & சிவசம்பு, எஸ். (2016). பொது மற்றும் தனியார் நடைமுறையில் கொல்லிகள் பரிந்துரைத்தல்: மலேசியாவில் உள்ள முதன்மை பராமரிப்பு கிளினிக்குகளில் குறுக்கு வெட்டு ஆய்வு.
Rahman, N. A., Teng, C. L., & Sivasampu, S. (2016). Antibiotic prescribing in public and private practice: A cross-sectional study in primary care clinics in Malaysia. BMC Infectious Diseases,16(1). doi:10.1186/s12879-016-1530-2