பூமியில் தோன்றிய முதல் உயிரினங்களில் நுண்ணுயிரிகளும் ஒன்றாகும். நுண்ணுயிரிகள் மண்ணிலும், தாவரங்களிலும், தண்ணீரிலும் வாழ்கின்றன. கைகுலுக்கல், கதவு கைப்பிடிகளைத் தொடுதல் மூலம் நுண்ணுயிரிகள் உங்களுக்குத் தொற்றலாம்.
நல்ல நுண்ணுயிரிகள் நிறைய உள்ளன. இறந்த விலங்குகள் மற்றும் தாவரங்களை மறுசுழற்சி செய்ய நுண்ணுயிரிகள் உதவுகின்றன. தொழில்துறையில், கழிவுநீர் சுத்திகரிப்பு, எண்ணெய் கசிவுகளின் முறிவு ஆகியவற்றில் நுண்ணுயிரிகளின் பங்கு முக்கியமானது. குடல் நுண்ணுயிரிகள் உணவைச் செரிமானம் செய்யவும், நோயை உண்டாக்கும் சில நுண்ணுயிரிகளை அழிக்கவும், ஊட்டச்சத்துக்களை வழங்கவும் உதவுகிறன. நல்ல நுண்ணுயிரிகள் மோசமான நுண்ணுயிரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.
சில நுண்ணுயிரிகள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன. நுண்ணுயிரிகள் கபவாதம், (ஸ்ட்ரெப்டோகொக்கஸ் நிமோனியா), மூளைக்காய்ச்சல், (ஹீமோபிலஸ் இன்ஃப்ளூன்ஸா), ஸ்ட்ரெப் தொண்டை, (குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகொக்கஸ்), உணவு நஞ்சடைதல் (எஸ்செரிச்சியா கோலாய் மற்றும் சால்மோனெல்லா) உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்தும். இந்தத் தீய நுண்ணுயிரிகள் நமக்கு நோயை ஏற்படுத்தமல் தடுக்க நம் கைகளைக் கழுவ வேண்டும். சமையலறையையும் குளியலறையையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பொதுவாக, நுண்ணுயிரிகள் கூட்டான குமுகங்களில் வாழ்கிறன. அவற்றின் குமுக வாழ்க்கைக்கு மற்ற நுண்கிருமிகள் போட்டியாளர்களாக வந்தால் சில நுண்ணுயிரிகளும் பூஞ்சைகளும் அவற்றை தடுக்கவும் வளர்ச்சியைக் கொல்லவும் எதிர்ப்பிகளை (நச்சுப் பொருட்கள்) உற்பத்திச் செய்கின்றன. சில நுண்ணுயிரிகள் இயற்கையாகவே தழுவல்களுக்கு ஆளாகி கொல்லிகளை எதிர்க்கும் சக்தியை அடைவதால் அவை உயிர்வாழ முடிகின்றது.
பொதுவாக, மக்கள் கொல்லிகளைத் தவறாக அல்லது அதிகமாகப் பயன்படுத்தும்போது, சில மோசமான நுண்ணுயிரிகள் விரைவாக நிலைமைக்குத் தக்கபடி தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு உயிர்வாழும். மாற்றியமைத்துக் கொள்ள முடியாத பல நல்ல நுண்ணுயிரிகள் இறக்கின்றன. இந்த தீய எதிர்ப்பாற்றலுடைய நுண்கிருமிகள் மிகவும் சர்வ சாதரணமாகிவிட்டன. மேலும், இந்த நுண்கிருமிப்பிணிகளுக்குச் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகிறது. நோயைத் தடுப்பதன் மூலமும் கொல்லிகளை அளவுக்கு அதிகமாகவும் தவறாகவும் பயன்படுத்துவதைக் குறைப்பதன் மூலமும், எதிர்ப்பாற்றலுடைய நுண்கிருமிகளால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும். மேலும், கொல்லிகளை அதிகப்படியாகவும் தவறாகவும் பயன்படுத்துவதன் மூலம் நல்ல நுண்ணுயிரிகளைக் கொல்ல வேண்டாம்.