நுண்ணுயிரினங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. ஒரு கிராம் மண்ணில் பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) நுண்ணுயிரிகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[1] நம் உடலில் 39 லட்சம் கோடி (தொள்ளுண்) நுண்ணுயிரிகள் இருக்கலாம். 39 தொள்ளுண்கள் = 39 மில்லியன்-மில்லியன் அல்லது 39,000,000,000,000)[2]
நுண்ணுயிரினங்களை ஐந்து முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம் — பூஞ்சைகள் (ஃபங்காய்), நுண்ணுயிரிகள் (பாக்டீரியா), தொல்லுயிரிகள் (ஆர்க்கேயா), தீநுண்மங்கள் (வைரஸ்கள்), ஒட்டுண்ணிகள் (பேரசைட்ஸ்). தொல்லுயிரிகள் உடல் நலத்திற்குக் கேடு விழைவிப்பதில்லை. பொதுவாக, பூஞ்சை நுண்ணுயிரினங்கள் மிகப்பெரியது. நுண்ணுயிரிகள் பொதுவாகப் பூஞ்சைகளை விட சிறியவை. இவற்றிற்கு அணுக்கரு (நியூக்ளியஸ்) கிடையாது. மிக அற்பமான உட்கருவும் சுவரும் இல்லாதவை தீநுண்மங்கள். தீநுண்மங்களால் பிற உயிரினங்களுக்குள் (ஓம்புயிர், host) மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும்.
ஒட்டுண்ணிகள் மற்றொரு உயிரினத்தின் (ஓம்புயிர், host) உள்வாழும் இன்னொரு உயிரினம், ஓம்புயிர் செலவில் ஊட்டச்சத்துகளைப் பெறுவதன் மூலம் பயனடைகின்றன. சில ஒட்டுண்ணிகள் மனித உடலுக்குள் மறைந்து வாழும். நோய்களை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான நுண்ணிய ஒட்டுண்ணிகளில் ஒன்று காட்டுக் காய்ச்சல் (மலேரியா) ஒட்டுண்ணிகள். இவை சிவப்பு இரத்த அணுக்களைப் பாதிக்கின்றன. கொசு ஒரு பாதிக்கப்பட்ட நபரைக் கடிக்கும் போது மலேரியா ஒட்டுண்ணிகள் பரவுகின்றன.
சில புழுக்கள் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. இருப்பினும், இவை பெரியவை மற்றும் பல உயிரணுக்களைக் கொண்டவை. அவை நுண்ணுயிரிகள் அல்ல.
பூஞ்சைகள் வித்து உருவாக்கும் கரிமப்பொருட்களை உண்ணும் நுண்ணுயிரினங்கள். காளான்களும் பூஞ்சைகளே. பெரும்பாலான பூஞ்சைகள் பல உயிரணுக்கள் கூடிய இழைகளின் வடிவத்தில் வளரும் (மைசீலியம்). இதற்கு நேர்மாறாக, ஒற்றைச் செல் வளர்ச்சி பழக்கத்தைக் கடைப்பிடிக்கக்கூடிய பூஞ்சைகளைக் காடி/நுரைமம்/புளிச்சொண்டி என்று அழைக்கிறார்கள்.
ஒரு காலத்தில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் விளைவுகளை எதிர்க்கும் திறனை அனைத்து நுண்ணுயிரினங்களும் பெறலாம். இந்தத் திறனை நுண்கிருமிகளின் எதிர்ப்பாற்றல் என்று அழைக்கப்படுகிறது.[3] எடுத்துக்காட்டாக மனிதர்களிடமும் விலங்குகளிடமும் பொருத்தமற்ற முறையில் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், எதிர்க்கும் திறனைக் கொண்ட நுண்ணுயிரிகள் பெருகி சுற்றுச்சூழலை (சுற்றுப்புறத்தை) மாசுபடுத்துகின்றன. கொல்லிகளின் பயன்பாட்டினால் மனிதர்கள், விலங்குகள், சுற்றுப்புறங்கள் ஆகியவற்றிலுள்ள நுண்ணுயிர்களின் எதிர்க்கும் திறன்கள் மென்மேலும் வளர்ச்சி அடைகின்றது. இந்நுண்கிருமிப்பிணிகளால் உயிரிழப்புகள் அதிகமாகின்றன.
ஆதார நூற்பட்டியல்
[1] இங்ஹம் ஏ. ர். (2019). பாடம் 3: நுண்ணுயிரிகள். மண் உயிரியலில்.
Ingham, E. R. (2019). Chapter 3: Bacteria. In Soil Biology. வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது. https://extension.illinois.edu/soil/SoilBiology/bacteria.htm.
[2] செண்டர், ஆர். பியூத்ஸ், எஸ். & மிலோ, ஆர் (2016) மனித உயிரணுக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் எண்ணிக்கைக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது:
Sender, R., Fuchs, S., & Milo, R. (2016). Revised Estimates for the Number of Human and Bacteria Cells in the Body. PLOS Biology,14(8). doi:10.1371/journal.pbio.1002533
[3]. உலக சுகாதார அமைப்பு (WHO) (2015). கிருமிகள் எதிர்ப்பாற்றல் குறித்த உலகளாவிய செயல் திட்டம். ஜெனீவா, சுவிட்சர்லாந்து: ஆவண உற்பத்தி சேவைகள்.
Global Action Plan on Antimicrobial Resistance. ISBN: 978 92 4 150976 3