பன்மருந்தெதிர்ப்பு மனிதனால் உருவாக்கப்பட்ட சிக்கல்களில் ஒன்று. எடுத்துக்காட்டாக, முறையற்ற முறையில் காசநோய் கொல்லிகளைப் பயன்படுத்துவதனால், பெருங்கிருமி காசநோய் உருவாகத்திற்குக் காரணமாக அமைந்தது.[1] காசநோய் சிகிச்சை நீண்ட 6 முதல் 9 மாதங்கள் தேவைப்படுவதாலும் பக்க விளைவுகளாலும் கொல்லிகளைத் தவறாகப் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது. நோயாளிகள் கொஞ்சம் சரியாகிவிட்டால் அவர்கள் மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள். மருந்து சாப்பிடுவதை நிறுத்துவது தவறாகும். காசநோய் நுண்ணுயிரிகள் இன்னும் உடலில் இருந்து அழிக்கப்பட்டிருக்காது. உடலில் இருக்கும் இந்நுண்ணுயிரிகள் நோயாளி ஏற்கனவே எடுத்த முதல் சுற்று மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்கி கொள்ளும். இந்நோயாளிகளுக்கு மீண்டும் காசநோய் வரும்பொழுது இந்நுண்ணுயிரிகளை முதல் சுற்று மருந்துகளால் அழிக்க முடியாது. அது மற்றுமில்லாமல் சுலபமாக பரவக்கூடிய தொற்றுநோயாகி மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
பன்மருந்தெதிர்ப்பு ஆற்றல் கொண்ட நுண்ணுயிரி குடும்பங்களில் ஒன்று கார்பபெனெம்-எதிர்க்கும் எண்டெரோபெக்டீரியேசி (சி.ஆர்.இ, carbapenem-resistant Enterobacteriaceae, CRE,). பெரும்பாலான கொல்லிகளால் அவற்றை அழிக்க முடியாத வகையில் உருவாகியுள்ளன எனக் குறிப்பிடப்படுகிறது. இதனால், சி.ஆர்.இ நுண்ணுயிரிகளைப் பெருங்கிருமி அல்லது சூப்பர்பக் என்று அழைக்கப்படுகிறது. அந்திம கொல்லி கோலிஸ்டின் (Colistin) சி.ஆர்.இக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர மற்ற பன்மருந்தெதிர்ப்பு நுண்ணுயிரிகளுக்கும் கோலிஸ்டின் பயன்படுகிறது. மருத்துவமனைகளிலும் குமுகாயத்திலும் கொல்லிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் சி.ஆர்.இ போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சி.ஆர்.இ போன்ற பன்மருந்தெதிர்ப்பு நுண்ணுயிரிகள் பலருக்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
பன்மருந்தெதிர்க்கும் எஸினெட்டோபெக்டர் (MDR Acinetobacter) சுகாதார அமைப்புகளில் முக்கியமான நுண்ணுயிரிகள். வரலாற்று ரீதியாக, கார்பபெனெம் கொல்லிகள் எஸினெட்டோபெக்டரால் ஏற்படும் நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையை அளித்துள்ளன. கொல்லிகளை முறையற்ற வகையிலும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தியதால் கார்பபெனெம்-எதிர்க்கும் எஸினெட்டோபெக்டர் வளர்ச்சிக்கும் பரவுவதற்கும் காரணமாகிவிட்டது. பன்மருந்தெதிர்க்கும் எஸினெட்டோபெக்டர் கடுமையான நோய்களை ஏற்படுத்தும். சிகிச்சையளிப்பதும் கடினம்.
இப்பன்மருந்தெதிர்க்கும் சிக்கலைச் சமாளிக்க மருத்துவமனைகள் அவர்களின் நலவியல் முறைகளையும் விதிகளையும் மேம்படுத்த வேண்டும். நோயாளிகளைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் அனைவரும் கைகளைக் கழுவுவதை உறுதி செய்தல் வேண்டும். கொல்லிகள் மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். குமுகாயத்தில் மக்கள் அனைவரும் அடிக்கடி கைகளைக் கழுவி தங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் எதிர்நுண்கிருமிகளை அளவுக்கு மீறியோ தவறாகவோ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
ஆதார நூற்பட்டியல்
[1] ஹூபர், சி. (2017, மார்ச் 20). பன்மருந்தெதிர்ப்பு ஆற்றல் கொண்ட காசநோய்க்கான காரணங்கள். போர்கன் திட்டம். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது
Huber, C. (2017, March 20). The Causes of Multi-Drug Resistant Tuberculosis. The Borgen Project. Retrieved from
https://borgenproject.org/causes-multi-drug-resistant-tuberculosis/